Monday, 9 October 2017

முத்தன் பள்ளம் எனும் முறுக்குக் கயிறு

முத்தனின் முன்னோர்கள் திருக்காட்டுப்பள்ளி, செந்தலையை  தலைநகராக்கி ஆட்சி புரிந்தவர்கள் , ஆட்சி மாறுதலுக்குப் பிறகு நாயக்கர், மராட்டியர் காலத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் காவல்பணி செய்வதாக ஒப்புக்கொண்டு  வெவ்வேறு கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றார்கள் .
அப்படித்தான் திருக்காட்டுப்பள்ளியிலிருந்த முத்தனையும்  ' தோப்புவிடுதி' பெருந்தலை தனக்கும், ஊருக்கும் காவகாக்க வேண்டுமென்று சொல்லி அழைத்துவந்து  ஊருக்குக் கிழக்காக இடம் ஒதுக்கி தங்க வைத்தார்...

தோப்புவிடுதிக்கு இடம்பெயர்ந்து வரும்போது , முத்தன்  தன் குலதெய்வமான காவக்  கருப்பையும் சேர்த்தே பிடிமண்ணில் சுமந்து வந்தான்.ஊரின் கிழக்காலே முத்தனும்,  ஊருக்கு மேற்காலே  அடர்த்த பத்தைக்குள் அவன் குலசாமியான கருப்பசாமியும்  குடியேறிக் கொண்டனர்.
முத்தனுடைய கருப்பசாமி தோப்புவிடுதிக்கு வந்து சேருவதற்கு முன்னாள் அந்த ஊருக்குள் பெண் தெய்வங்கள் மட்டும்தான் இருந்தது. கருப்பசாமி வந்த பின்னால் பெண் தெய்வங்களோடு காவக்கருப்பும் சேர்ந்து கொண்டதாகவும், கருப்பு சேர்ந்த பின்னாடி தாய்த் தெய்வங்களுக்கும் சக்தி கூடிப்போச்சு என்று ஊருக்குள் பேச்சாகக் கிடக்கிறது.
இந்நிலையில் முத்தனுக்கு திருமணமாகி அவனுக்கு 'பாட்டன் ' என்ற மகன் பிறக்கிறான் .

முத்தன் மகன் பாட்டனும் தன் குடிப்பெருமை  மீது  கொண்டிருந்த பெருமிதத்தை போலவே குலசாமியின் மீதும் அதீதப் பற்று வைத்திருந்தான். அந்த ஊர்க்காரர்கள் பாட்டனின்  சாதிக்கு எந்தவகையிலும் குறைந்தவர்கள் இல்லை என்றாலும் அவர்கள் வீட்டு உணவை தான் அருந்தினால் தன் மீது தன்னுடைய குலசாமி கருப்பு அணையாது  என்று கருதி பாட்டன் பயம்கொண்டான்.

" ஏலே பாட்டா, நீ எங்க குடியில சாப்பிடாமப் போன வெளியூரு  சாதிசனம் எங்கள மதிக்குமாலே.."
என்று ஊர்க் காரர்கள் கூப்பாடுபோட்டு ஊர்ப் பெருந்தனத்திடம் வழக்கை கொண்டு செல்கின்றனர்.

உண்மையிலேயே பாட்டன் தங்கள் வீட்டில் உணவருந்தாதது ஊரின் பிரச்சினையல்ல... காவக்காரப் பாட்டன்  காவலோடு சேர்த்து வேறுசில பணிகளையும் தங்களுக்கு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பே ஊரை பெருந்தனத்திடம் அழைத்துச் சென்றது.

பெருந்தனக்காரருக்கு பாட்டன் மீது அளவு கடந்த பாசம் உண்டு, முன்பு ஒருமுறை  பட்டுக்கோட்டைச் சந்தைக்கு போய்த்திரும்பியபோது நடுக்காட்டில் நரிக் கூட்டம் பெருந்தனத்தை விரட்டவும்... பட்டன்தான் நரியோடு மல்லுக்கட்டிவிட்டு அவரை தோளில் தூக்கிகொண்டுவந்து ஊர் சேர்த்தான்.
பாட்டனின் அந்த துணிகரச் செயல் ஊர்ப்பெருந்தலைக்கு கண்ணீரை வரவழைக்க... ஊர்த்தலையின் கண்ணீர் கண்டு பாட்டன்

' ஐயா என்னயிது , யாரும் பார்த்தால் உங்க குடிப்பெரும என்னாவது '  என்று பதறவும்...

என்னலே பெரிய வெங்காயப் குடிப்பெரும என்று சொல்லி ...  முத்தரையர்களின் வீரத்த நான் கேள்விப்பட்டிருக்கேன், இப்பதான்ய நேர்ல பார்க்கிறேன்...
என்றெல்லாம்  பலவாறு பாட்டனுக்கு புகழாரமெல்லாம் சூட்டியிருக்கிறார்.

இருந்தாலும்...பெருந்தனம் செத்த பிறகு , சேவகம் பாத்தாதான் ஊருக்குள்ள இருக்கலாம் என்று ஊர்ச்சனம் சொல்லவும்... வேறு வழியின்றி காவக்காரப் பாட்டன் காவகாத்த மண்ணையே விட்டுப் பிரியும் வலியோடு  காட்டுவழியே  கால்நடையா  நடந்து ஊரணிக்காட்டிலிருந்த தன் அண்ணனைப் பாக்கப் போறான்.
பாட்டனின் அண்ணன் ஊரணிக்காட்டில் ஒரு பெருங்குடியான வீட்டிற்கு காவப்பணி செய்துவருகிறார். தம்பியின் கதை கேட்டு திகைத்த அண்ணன்
      'என்ன இருந்தாலும் ஆத்தாலும், அப்பனும் நம்ம  பெத்த மண்ணுடா அது, அத விட்டு நீ வரக்கூடாதுணு சொல்லி பாட்டனயும், அவன் ஆசையோடு அண்ணன்காரனுக்காக இடுப்பு வேட்டியில் மடித்துக்  கொண்டுவந்த உடும்பையும்  சேர்த்து விரட்டி விட்டான்...

நம்பி வந்த அண்ணன்காரணும் விரட்டிவிட்ட சோகத்தில் காட்டுவழி நடந்து வந்த பாட்டன் தீத்தான்விடுதி வந்து சேர்கிறான், தாகமும், பசியும் அவனுக்குள் சேர்ந்துகொள்ள  அங்கிருந்த ஒத்த வீட்டுப்  பருவப் பெண்ணிடம் தண்ணீரை வாங்கி குடித்துவிட்டு பசிக்கு ஆகாரமும் கேட்டு வாங்கிப் புசிக்கிறான். அசதியில் கொட்டகை வாசலிலே படுத்தவனுக்கு நள்ளிரவில் அந்தப் பெண் முத்தாயி  தன் வீட்டுக்குள்ளாறயே அவனுக்கு  படுக்க இடம் கொடுக்கிறாள், படுத்தவனுக்கு  குளிரைத் தணிக்க தன் உடலையும்  ஒப்படைக்கிறாள் !

இரவில்எல்லாவற்றையும் அவள் மூலம் தணித்துக் கொண்டவன் விடிந்தவுடன் அவளிடம் சொல்லாமலேயே  விடைபெற்றுச் சென்றுவிட்டான். அவன் கூட்டியாந்த ரெண்டு நாய்களில் ஒன்று மட்டும் கொட்டகை வாசலிலேயே படுத்துக் கிடந்து, அவளிடம்  பாட்டன் வந்துசேரும் நாள்வரை அவளை காவல்காப்பதாக கட்டியங்கூறிக் கொண்டிருந்தது.

நகர்ந்து சென்ற பாட்டன் அடுத்து அண்டனூருக்கு காவக்காரனாகிறான், அண்டனூரின் காடு, வயல், குளங் குட்டை என்று எல்லாமே பாட்டனின் காவலுக்குள் இரண்டு ஆண்டுகள் பத்திரமாக இருந்தது. ஆனால் அண்டனூரின் சாதி ,
நாங்கதான் ஒசந்த சாதி எங்களுக்குதான்  பாட்டனோட காவல் பாத்தியப்பட்டது ,
நாங்கதான் சனக்கட்டு கூட உள்ளவுக எங்களத்தான் பாட்டெங் காவ காக்கணும்  ...
    என்று வெவ்வேறு தொனியில் விவாதிக்கக் தொடங்கியவுடன் வெறுத்துப்போன பாட்டன் முத்தாயியின் நினைவும் சேர்ந்து வருத்த அண்டனூரிலிருந்து வெளியேறி முத்தாயியை தேடிச் செல்கிறான்...பின்பு  அவளை மணம் செய்து கொண்டு தனக்கு மட்டுமே பழக்கப்பட்ட ஒரு அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அவளோடு  சேர்ந்து குடியேறுகிறான் .  அந்த ஊரின் பிந்தைய பெயர்தான்
"முத்தன் பள்ளம்" .

-------------------------------
--------------------------------

           பாட்டன் ஒருமுறை புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்டப் பைரவ தொண்டைமானுக்கு ஒரு மான்குட்டியை பரிசளித்தான், மான் குட்டியின் அழகில் சொக்கிப்போன தொண்டைமான் அது பிடிக்கப்பட்ட இடத்தை விசாரித்தார். முத்தன் பள்ளம் என்ற பகுதியில் மான்குட்டி பிடிபட்ட கதையை  பாட்டன் மன்னரிடம் சொல்கின்றான்...

நரியாறு, அக்னி ஆறு, மானியக் குளம் இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று கலக்கும்  பகுதிதான் 'முத்தன் பள்ளம்' . முத்தன்பள்ளம் தீவாக மாறுவதும், பாலைவனமாகச் சுடுவதும் பருவநிலையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் ஆண்டு முழுவதுமே இதில் ஏதோவொரு நிலையில்தான் முத்தன்பள்ளம் மூழ்கிக் கிடக்குமாம்..! காட்டுவழியாக முன்பு பாட்டன் நடந்துவந்தபோது இந்த இடத்தில்தான் ஒரு நரியைப் பிடித்து உணவுக்காக உரித்தானாம், மக்கள் வாழ்வதற்கான  எந்த முகாந்திரமும் அற்றுக் கிடந்த அந்த மணல்வெளியில் பாட்டனுக்கு ஏனோ அப்படி ஒரு ஈர்ப்பு. அதனால்தானோ என்னவோ தொண்டைமானே அவனுக்கு பட்டயம் கொடுத்து நூறு குடியும் , அவர்களுக்கான புழங்கும்  இடமுமாக  அந்தக் காட்டாம்புதர்ப் பகுதியை அவனுக்கு பட்டயத்தில்  எழுதிக் கொடுத்தார்கள்!

பாட்டன் முத்தாயியோடு சேர்ந்து அங்கு வாழத் தொடங்குகிறான், அவர்களுக்கு நான்கு மகன்கள் பிறக்கிறார்கள். அவர்களின் வாரிசுகள்தான் இன்றும் 'முத்தன் பள்ளம் ' என்ற வாழக்கூடாத மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..?!

அண்டனூர் சுராவினுடைய ' முத்தன் பள்ளம் ' எனும் புதினத்தின் கரு இதுதான்.. இந்தக் கருவிலிருந்துதான் ஒரு கிராமத்தின், அந்தக் கிராமத்தில் (?) வாழ்கின்ற முத்தரையர் என்கிற சாதியின் வழிவந்த மக்களின் அவலங்களை கண்ணீரில் வடித்திருக்கிறார் அண்டனூரார்.
முத்தன் பள்ளம் என்றோ வாழ்ந்து மடிந்தவர்களின் வரலாற்றுக் கதையல்ல... இந்த நொடியிலும் நம் கண்முன்னே  உயிர்த் துடிப்புடன்  வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு  உருக்குலைந்த கூட்டத்தின் அவலக்குரல் இது!

சாலைகளற்ற ஊரைக்கூட நாம் கேள்விப்பட்டிருப்போம்,  ஆனால் கூரைகள் கூட சரிவர இல்லாமல் பிஞ்சுபோன ப்ளக்ஸ் பேனர்களை குடிசையாக்கி காலைக்கடனுக்கு ஒதுங்குவதற்குக் கூட இடமில்லாமல், மின்சாரமற்று, பள்ளிக்கூடமற்று, எந்தப் போக்குவரத்துமற்று, பட்டா நிலமோ , வாக்காளர் அடையாள அட்டையோ , ரேசன் கடையோ எதுவுமே இல்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை அருகில் ஒரு கிராமம்! பாம்பு கொத்தினால் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லவேண்டுமென்ற புரிதல்கூட இல்லாமல் கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்து மந்திரிக்கத் தூக்கிச் செல்கிற மக்கள் இன்னுமே அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...
இத்தனை அவலங்களோடு டிஜிட்டல் இந்தியாவின் ஏதோவொரு மூலையில் உள்ள கிராமம்தான்
முத்தன் பள்ளம்.

ஒரு அரசகுடியில் பிறந்து , ஊர்க் காவலுக்கு வந்தவர்கள்.... தாங்கள் அரசிடம்  பெற்ற பட்டயத்தை காவல் காக்க முடியாமல் ஒரு சமீனிடம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஒப்படைத்து ஏமாந்தவர்கள், இன்றுவரை தங்கள் பல்லாண்டு சேமிப்புகளை   பட்டாகேட்டு லஞ்சமாக கொடுத்து ஏமாத்தப்பட்டடுக் கொண்டிருப்பவர்கள்... குறைந்தபட்சம் பட்டயத்தை மட்டுமேனும் அவர்கள் பாதுகாத்திருந்தால் முத்தன் பள்ளம் தூரத்து கிராமங்களின் விளைநிலங்களாக வளைக்கப்பட்டிருக்காது, அந்த நூறு குடிகளும் ஓடியாட இடமும், உக்கார்ந்து கண்ணயர கொஞ்சம் நிலமுமாகவேனும் முத்தன் பள்ளம் எஞ்சியிருக்கக் கூடும்...

இந்தப் பாவப்பட்ட மக்கள் படுகுழிக்குள் தள்ளப்பட்ட கதையைப் பேசும் படைப்பாளி புத்தகத்தின் நுழைவிடத்திலேயே இவ்வாறு குறிப்பிடுகின்றார்...

" புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தவர்கள் முத்தரையர்கள். முத்தரையர் ஆட்சி முதல் தொண்டைமான் ஆட்சி வரைக்கும் அவர்களின் பங்களிப்பும், உயிர்த் தியாகமும் அளப்பெரியது. அத்தகையவர்கள் மட்டுமே வாழ்கின்ற ஒரு கிராமம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது என்னைப் பொறுத்தவரை ஒருவகை தாக்குதல்தான்...

முத்தன் பள்ளம் நாவலின் வழியே முத்தரையர்களின் ஆட்சியை, அவர்களை, அவர்களின் பெருமைகளை புகழ்பாடவோ அவர்களின் வழியே பிறரைத்   தாழ்த்தவோ செய்யவில்லை, அதற்கான அவசியமும் இல்லை.." என்கின்றார்.

நாவல் எங்கும் நாயக்கர், மராட்டியர் காலமுதலே  முத்தரையர்கள் தஞ்சையிலிருந்து விரட்டப்பட்டதும், முத்தரையர்களை கண்காணித்து ஒடுக்குவதன் மூலமே  தங்கள் ஆட்சியை தற்காத்துக் கொள்ள முடியும் என்று உணர்ந்து வடுகப் படைகள்  செயலாற்றியதையும் ( ப 132) , அம்பாள் தோப்பிற்கும் கல்லாக்கோட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் அடர்ந்த காட்டினுள் ஒளிந்திருந்த நாயக்கர்களை இனங்கண்டு , தொண்டைமான் சீமையிலிருந்து  விரட்டியடிக்க முத்தரையர்களின் வனாந்திர அறிவும், வலிவுமிகு தோளுமே சரியானதென்று தொண்டைமான்கள் கண்டுணர்ந்து முத்தரையரை பயன்படுத்திக் கொண்டமையும்...

முத்தரையர்கள் வலிவு குன்றியவுடன்  கள்ள நாட்டு வாரப்பூரும், கந்தர்வக்கோட்டையும் அந்தண நாடாக மாறி அசல் நாட்டோடு சட்டையிடத் தொடங்கியதும் வரலாற்றின் வழியில் நினைவூட்டலாக நாவலில் அமைந்துள்ளது. குலதெய்வ வழிபாட்டிலும், குறிபார்த்து கல்லடி கொடுப்பதிலும் முத்தரையர்களின்  ஊடே பாய்ந்து மரபின் வழி ஊற்றெடுக்கும் வேட்டுவக் குணாதிசயங்களையும் படம்பிடித்துள்ள நாவல்,
அறுத்துக் கட்ட மறுக்கும் அசல் நாட்டுக் கள்ளர் கதையையும், அம்பாள்தோப்பு கள்ளர் பஞ்சாயத்தின் கொடூரத் தனங்களையும்  வாசிப்பாளனுக்கு அதன் உண்மைத் தன்மையுடன் அறியத் தருகின்றது. முத்தரையர்களையும், கள்ளர்களையும் எதிர்நிலைப்படுத்தியே எழுதப்படும் நூற்றுக்கணக்காண வரலாற்று நூல் வரிசைகளிலிருந்து மாறுபட்டு முத்தன் பள்ளம் இருசாதி மக்களின் இணைவிற்கும் முடிச்சிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை...

புதுக்கோட்டை வரலாறு எழுதிய பல ஆய்வாளர்கள் முத்தரையரைப் பேசுமிடத்து ஆட்சியிழந்து அவர்கள் அடிமைப்பட்ட காலநிலையின்  கதைகளை மட்டுமே கோடிட்டுக் காட்டுவர் . முத்தரையர்கள் சமூகத்தின்  விளிம்பு நிலைக்கு  தள்ளப்பட்ட கதைகளின் ஊடாக முத்தரையர்களின் வறுமைப்பட்ட நிலைகளை தமக்கு வாய்ப்பாக்கி  புதுகையின் வரலாற்றுக்கு அவர்கள் ஆற்றி வந்த தியாகங்களை மறைத்தும்,  அவர்களின் கலைப்படைப்புகளை திரித்துமே கதை புனைந்து எழுதுவர். ஆனால் முத்தன் பள்ளம் குறிப்பிட்ட காலநிலையில்  முத்தரையர்களின் மீது  வலிந்து திணிக்கப்பட்ட அடக்குமுறைகளை வரலாற்றுக் கண் கொண்டு அணுகி , முத்தரையர்களை திட்டமிட்டு சிலர் வீழ்த்த நேர்ந்ததன் காரணங்களை கண்டுணருகிறது! அந்நியர்கள் இங்கே தமக்கான   குடியேற்றங்களை  ஏற்படுத்திக் கொள்ள  முனைந்தபோதெல்லாம் , தமது பழங்குடித்தனத்தின் மூர்க்க நிலையில் நின்று முத்தரையர்கள் அவர்களோடு மல்லுக்கட்டிய கதைகள்  இதுவரை பட்டயங்களில் மட்டுமே இருந்தது, தற்போது அண்டனூராரின் மைக் கசிவில் பக்கங்களில் அச்சேறி அவை தலைமுறைகளைத் தழுவத் தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டை மார்த்தாண்ட பைரவத் தொண்டமானின் காதல் திருமணம், புதுக்கோட்டை சமஸ்தான குடிகளிடம்  அது ஏற்படுத்திய தாக்கங்கள் , புதுகையின்  சிற்பி சேசையா சாஸ்திரி  என்று நூல் முழுக்க நூற்றாண்டுகளின் வரலாறு கோர்வையாக்கப்பட்டு , முகவரியற்ற  முத்தன் பள்ளத்து முத்தரையர் குடிசைக்குள் இறுதியில் வந்து நின்று மௌனிக்கிறது முத்தன் பள்ளம்!

நூலைப் படித்து முடிக்கும் எவருக்கும் முத்தன் பள்ளத்துக்கு ஓரெட்டு போய் பார்க்கணும் என்ற உந்துதல் மனதின்  உள்ளாறே எழுந்தாலும், என்னளவில்  இன்னும் எத்தனை முத்தன் பள்ளங்களுக்குள் முத்தரையர்கள் இந்த புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும்  உறைந்து கிடக்கிறார்களோ என்ற பயமும் சேர்ந்தே எழுகிறது.
ஆயிரம் அண்டனூர் சுராக்கள் உருவானால்தான் அவர்களின் படைப்புகளின் வழியே முத்தன் பள்ளம் போன்ற முறுக்குக் கயிறுகளுக்குள்  மாட்டிக் கிடக்கும் மக்களை வெளிக்கொணர முடியும்...

துரை. இராஜகுமரன்
வடகாடு.


Sunday, 16 April 2017

இரணசிங்க முத்தரையன் கல்வெட்டு கண்டுபிடிப்பு

"விலக்க ஏரன் இரணசிங்க முத்தரையன்"

பற்றிய 1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ! 

------------------------------------------
------------------------------------------

முத்தரையர் மரபில் ஒன்பதாம் நூற்றாண்டில் தன்னாட்சி பெற்று ஆண்ட கோஇளங்கோ முத்தரையனின் சம காலத்தில் புதுக்கோட்டை பகுதியில் இந்த 'இரணசிங்க முத்தரையன் '  ஆதித்த சோழனுக்கு பக்க பலமாக இருந்து நாடாள்வாராகச் செயல்பட்டுள்ளார்.

நிருபதுங்கப் பல்லவனின் கல்வெட்டு குறிப்பிடும் "முத்தரையர் நாடு" பகுதியில் முத்தரையர்களின் நேரடி ஆட்சி நிறைவுற்றபிறகு ஒன்பதாம் நூற்றாண்டுவாக்கில் நாடுகட்டி ஆண்ட  முத்தரையர்கள் பின்னர் சோழப்பேரரசிற்கு உட்பட்ட நாட்டு அரையர்களாகவும், நாடாள்வாராகவும் மாற்றம் பெற்றனர். ( உதாரணம் - முத்தரையர் மரபினராகிய தானவதரையர்கள் ஆண்ட தானம நாடு)

பிற்காலச் சோழராட்சியில் நாட்டுத் தலைவர்களாகவும், நாடாள்வாராகவும், அரையர்களாகவம் , படைத் தளபதிகளாகவும், போர் மறவர்களாகவும் மாற்றம் பெற்ற முத்தரையர்கள்  நீர்ப்பாசனப் பணிகளுக்காக,  நீர் மேலாண்மையை மேற்கொண்ட செய்திகள் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளது.

அந்த வரிசையில் தற்போது இரணசிங்க முத்தரையனைப் பற்றிய  செய்தி புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் ஆய்வுக் குழுவினரின் மூலம் தெரிய வந்துள்ளது... கந்தர்வக்கோட்டைப் பகுதியில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுகளிலேயே காலத்தால் முந்தைய கல்வெட்டாகவும் இது கருதப்படுகிறது. 

Friday, 3 February 2017

" கள்வர் கள்வன் "

" கள்வர் கள்வன் " கள்ளர் சாதியா..



        கள்வர் என்ற சொல்லாடல் சங்க இலக்கியப் பாக்களிலேயே பல இடங்களில் பதியப்பட்டுள்ளதை நாம் அறிவோம், சங்க இலக்கியங்கள் அக்காலத்திய வேந்தர்களைக் குறிக்குமிடத்து சிறப்புடன் இந்த சொல்லாட்சியைக் கையாண்டுள்ளன ! மேலும் இதன் தொடர்ச்சியாகத்தான் பிற்கால பாண்டிய, சோழ வேந்தர்களும் கூட தம்மை " கள்ள வேந்தன்" , "கள்ளப் பெருமான்" , " கள்வன் " என்றெல்லாம் பலவாராக தத்தமது கல்வெட்டுகளில் பதிந்து கொண்டுள்ளனர் என்பதும் நமக்கு சொல்லாமலேயே விளங்கும் ! இவ்வாறாக கள்வர் என்ற வார்த்தையை தமிழ் இலக்கியங்களும், கல்வெட்டுகளும் உயரிய பொருளில் கையாண்டுள்ளன...


  ஆனால் 'வார்த்தைகளின் பொருளை ' அந்தந்தக் காலகட்ட அரசியல் நிலையோடு ஒப்புமைப்படுத்தி முறையான ஆய்வியல் அணுகுமுறையைக் கையாளாமல்  சிலர் பழங்காலத்திய கள்வரை இந்நாளைய 'கள்ளர்' சாதியினரோடு தொடர்புபடுத்தி எழுதி வருகின்றனர். அந்த வகையில் சோழ, பாண்டிய மன்னர்களைப் போலவே " கள்வர் கள்வன்" என்ற பெயரால் செந்தலைக் கல்வெட்டுகளில் குறிக்கப்பெற்றுள்ள முத்தரையர் மரபுவழி மன்னரான "சுவரன் மாறனாகிய இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்"  கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்கிற ரீதியில் தற்காலத்தில் சிலர் ஆய்வு என்கிற பெயரில் தங்களின் 'அரைவேக்காட்டுத்தனத்தைவலைதளங்களில் பதிவாகப் பதிந்து வருகின்றனர்! இவர்களைப் பொறுத்தமட்டில் கள்வன் என்றவுடனேயே அது கள்ளர் என்கிற தனியொரு சாதியாக மாறிவிடுகிறது.


முதலில் கள்வருக்கும் கள்ளருக்குமான தொடர்பு என்ன என்பதைப் பற்றி ஆராய்வோம்... வழிப்பறி, கொள்ளை, வேற்றுப் புலத்தாரிடமிருந்து கவர்ந்து வருதல் போன்ற களவுச் சம்பவங்களைக் குறிக்குமிடத்து கள்ளர் என்கிற வார்த்தையும், சில இடங்களில் கள்வர் என்கிற வார்த்தையும் சங்கப் பாக்களில் பயின்று வருகின்றன. அதேநேரத்தில் சில இடங்களில் அரசன், தலைவன், வேந்தன் என்கிற பொருளிலும் 'கள்வன் 'என்ற வார்த்தை பாக்களில் பயின்றுவரக் காண்கிறோம்!  எனவே எதைக் குறித்து வருகிறது என்பதைப் பொறுத்தே கள்வனுக்கு விடைகாண முடியும்...


உதாரணத்திற்கு சீவக சிந்தாமணியில் செய்யுள் எண் 741 ல் " கள்ளராற் புலியை வேறு காணிய'" எனும்  தொடரை விளக்குமிடத்து நச்சினார்க்கினியார் " அரசரைக் கொண்டு சீவகனைப் போர்காண வேண்டி.." என்று பொருள் கொள்கிறார். அதாவது இச்செய்யுளில் 'கள்ளர் ' எனும் சொல்லினை 'அரசர் ' என்பதாக பொருள் காண வேண்டுமே தவிர திருடன் என்று பொருள் கூற முடியாது!  




அதுபோலதான் செந்தலைத் தூண் கல்வெட்டுகளிலோ அல்லது கிள்ளுக்கோட்டை நடுகல்லிலோ குறிக்கப்பட்டுள்ள 'கள்வர் கள்வன்' என்ற சொல்லை ஆதாரமாக்கி பெரும்பிடுகு முத்தரையரை 'களவில் உயர்ந்தவர் ' என்று நாம் பொருள் சொல்ல முடியாது. 'மல்லர் மல்லா' என்றால் மல்லர்களுக்கெல்லம் மல்லன், 'மறவர் மறவ' என்றால் வீரருக்கெல்லாம் வீரர் என்று பொருள்படுவதைப் போலதான் ' கள்வர் கள்வன்' என்பது அரசரில் உயர்ந்த அரசன், மூத்த அரசன் என்று பொருள்படுமே தவிர கள்ளன் ( திருடன்) என்று பொருள்படாது... 


நடுகல் ஆராய்ச்சியாளரான இரா. பூங்குன்றன் போன்றவர்கள் கூட ( தொல்குடி- வேளிர்- அரசியல்)  கள்வர் என்கிற வார்த்தை மிகப் பிந்தைய காலத்திலேயே திருடன் என்கிற ஒற்றைப் பொருளைத் தருகிற சொல்லாக சுருங்கிவிட்டதை பதிவு செய்துள்ளதை இங்கு நாம் கவனத்தில்  கொள்ளலாம்.




மேலும்  முத்தரையர்களையும், கள்ளர்களையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக் கொள்ளும் போக்கு பலகாலமாகவே வரலாற்றாசிரியர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதற்கு உதாரணமாகச் சில நடைமுறைகளைச் சொல்லலாம்...

1881 ம் ஆண்டில் நடைபெற்ற சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி அருகே உள்ள ஒரு கிராமத்தில் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த அம்பலகாரர்கள் தங்களை கள்ளர் சாதி என்பதாக  பதிவிடுவதை எதிர்த்து ஆங்கிலேய அரசுக்கு புகார்  மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். மேலூர் வட்டாரக் கள்ளர்கள் வெள்ளையர் காலம் முதல் தங்களை 'அம்பலகாரர் ' என கூறிக் கொண்டமையால்  முத்தரைய அம்பலகாரர்களையும்  அக்காலத்தில் கள்ளர் சாதியாக கணக்கிட முனைந்துள்ளனர் என்பதற்கு இது ஒரு சான்றாகும்...



இதேபோல புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 1931 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கீட்டிலும் கூட முத்தரையர் சமூகத்தின் உட்பிரிவினரான வலையர், சேர்வை, அம்பலகாரர் மக்களை கள்ளர் சாதியோடு சேர்த்து  கணக்கிட்டுள்ளனர்...
முத்தரையர்களுக்கும் , கள்ளர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும் சிலரின் கடந்த காலத்திய தவறுகளால் இருசமூகத்தினரையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளும்போக்கு இன்றளவும் நீடித்து வருகிறது.



      குறிப்பாக கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியரான ந. மு. வேங்கடசாமி நாட்டார் போன்றோரே  கள்ளரையும், முத்தரையரையும் ஒன்றாக இணைத்தும், குழப்பியும் பேசியுள்ளனர் , கல்வெட்டு ஆசிரியர்களின் சிலரின் முரண்பட்ட ' சொல்லாடல்' குறிப்புகளை இவர்கள் ஆதாரமாக சொல்லிக்கொண்டு, 'கள்வன் ' என்று பெரும்பிடுகு முத்தரையர் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர் கள்ளர் வகுப்பினரே என்று கதையளந்துள்ளனர். 

உள்ளபடி பார்த்தால் செந்தலை கல்வெட்டுகள் என்பவை இலக்கியப் பாக்களே! அவற்றில் முத்தரையர்களின் பல பட்டங்கள் இடம்பெற்றுள்ளன தவிர எந்த இடத்திலும் அவர்களின் குலம் குறித்த குறிப்புகள் இல்லை. சத்ருமல்லன், அதிசாகசன், ஸ்ரீமாறன், அபிமான தீரன், சத்ருகேசரி, தமராலயன், செருமாறன், தஞ்சைக் கோன் என்ற பல பட்டப் பெயர்களுள் ஒன்றாக கள்வர் கள்வன் என்பதும் வந்துள்ளது! எப்படி  இந்தப் பட்டங்களின் ஒன்றில் 'கோன் ' என்று வந்திருப்பதாலே முத்தரைய மன்னர்களை கோனார்கள் என்று சொல்லிவிட முடியாதோ அப்படியேதான் கள்வன் என்ற சொல்லை கள்ளராகவும் வகைப்படுத்திட முடியாது...

வேங்கடசாமி நட்டாருக்கு கடந்த நூற்றாண்டில் "கள்ளர் சரித்திரம் " என்ற நூலை எழுதுவதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதும்அதிலும் குறிப்பாக  தென்பகுதி  கள்ளர்களையும், பிறமலைக் கள்ளர்களையும் காட்டிலும் தஞ்சைக் கள்ளரை உயர்த்திப் பிடிக்க வேண்டியதற்கான அவசியம் நாட்டாருக்கு ஏன் ஏற்பட்டது என்பதையும் முதலில் நாம் உணர வேண்டும்.

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில்  கள்ளர் சமூகத்தின் மீது வெள்ளையர்களால் தீவிரமான முறையில் திணிக்கப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கொடூரத்திலிருந்து "தஞ்சைக் கள்ளர்கள்" தம்மை தனிமைப்படுத்திக் கொள்வதற்காகவே சில மன்னர்களோடும், புகழ் வாய்ந்த ஆன்மிக அறச்செயலாளர்களுடனும் தங்களை ஒப்பிட்டு 1920களுக்குப் பிறகு புத்தகங்களை எழுதி அதை வெள்ளையர்களிடத்தில் ஆவணமாகச் சமர்ப்பித்து அந்த சட்டத்திலிருந்து தம்மை தப்பிவித்துக் கொண்டனர் என்பது வரலாறு...
எந்த அடிப்படை ஆதாரங்களுமின்றி  முத்தரைய மரபினரையும், முத்தரைய வேந்தரான திருமங்கை ஆழ்வாரையும் கள்ளர் சாதியாக உருவகப்படுத்த வேண்டிய அவசியம் இதன் காரணமாகவே வேங்கடசாமி நாட்டாருக்கு   ஏற்பட்டது என்பதை அக்கால அரசியல் குறித்து ஊன்றிப் படிப்போரால்  எளிதாக உணர முடியும்... அந்தப் புத்தகத்திலும் கூட வேங்கடசாமி நாட்டார் கள்ளர்களை முத்தரையர்களோடு

                'உடன் இணைத்துக் கொண்டாரே தவிர' கள்ளர்கள்தான் முத்தரையர் என்று 'உரிமை          கோரவில்லை  '

கள்ளர் சமூகத்தை சேர்ந்த திரு முகில்நிலவன் அவர்களின் 'தமிழ் இலக்கியத்தில் குற்றப்பரம்பரையினர்' புத்தகத்தின் கட்டுரை மட்டுமல்லாது  சுந்தரவந்தியத் தேவனின் பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்" நூலிலும் (பக்க எண்: 650) தெளிவான முறையில் நான் மேற்சொன்ன தகவல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.  



முத்தரையர்களின் வரலாறு கள்ளரின மக்களின் ஒரு பிரிவினரை "குற்றப் பரம்பரை " எனும் கொடும் சட்டத்திலிருந்து காப்பாற்றியுள்ளது என்றால் அதை பெருமைக்குரிய வரலாற்றியல் நிகழ்வாக நினைவில் நிறுத்திக் கொள்வதில் தவறில்லை...   ஆனால் பாவாணர் போன்ற மொழி ஆய்வாளர்களே கள்ளர் சாதியைத்தான் முத்தரையர் என்று பதிவு செய்துள்ளனர் என்றெல்லாம் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவதை எப்படி ஏற்றுக கொள்ள முடியும்..சரி அவர்கள் சொல்லும் ' தமிழர் வரலாறு' நூலில் பாவாணர் என்னதான் சொல்லியிருக்கிறார் என்று பார்த்தோமேயானால்
                
              "
தஞ்சை மாவட்டத்தில் ' செம்பிய முத்தரையர்' பட்டம் கொண்ட கள்ளர்கள் முத்தரையர்களின் " படை மறவர்" வழிவந்தோராக இருக்கலாம்..." 

என்றுதான் சொல்லியுள்ளாரே தவிர கள்ளர்கள்தான் முத்தரையர் என்று ஓரிடத்திலும் சொல்லவில்லை!  இந்த மூன்று வரிகளை மட்டும் படம் பிடித்து வைத்துக் கொண்டு வரலாறு பேசும் கள்ளர் வரலாற்றாய்வாளர்கள் அதற்கு மேலேயுள்ள வரியில்
       
    " இன்றைய திருச்சி மாவட்டங்களில் பயிர்த் தொழில் செய்து வாழும் முத்திரியர்களே பண்டைய முத்தரைர் வழியினர்"

என்று பதிவு செய்துள்ளதை வசதியாக மறைத்து விடுகின்றனர். 



மேலும் அதே தமிழர் வரலாறு புத்தகத்தில் " இற்றைப் பிறவி குலங்கள்" எனும் தலைப்பில் அம்பலக்காரன் எனும் பிரிவினரே முத்தரையர், வலையர், வன்னிய வலையர் என்று பிரிவுற்று இருப்பதையும் பாவாணர் ஐயா தெளிவாகச் சுட்டியுள்ளார் இதையும் கள்ளர்கள் கணக்கில் கொள்வதில்லை!


 படை மறவர் வழியினர் என்பதற்கும், இந்தச் சாதியின் வழிவந்தோர் என்பதற்குமான வேறுபாட்டை அறிய முடியாதவர்களை எண்ணி வியப்படையவே முடிகிறது! மேலும் ' செம்பிய முத்தரையர் ' பட்டம் தஞ்சை கள்ளர்களுக்கு வழக்கில்  இருக்கிறது என்பதைக் கூட பாவாணர் ஐயா "கள்ளர் சரித்திரம் " எனும் நூலிலிருந்து தான் எடுத்தாளுகிறாரே தவிர நடைமுறைச் சான்று ஏதும் இல்லை...


பட்டம் போதுமா சாதியை வரையறுக்க...?

           
          வேட்டுவ மரபினரான வலையர் குடியினரே பின்னாட்களில் முத்தரையர் என்று அழைக்கப் பெற்றனர் என்பதற்கு பல நூறு சான்றுகள் இருக்கின்றன. கல்வெட்டு, பட்டயம், இலக்கியம், கடவுள் வழிபாடு , முத்தரைய மன்னர்களுடனான தொன்மத் தொடர்பிற்கான நிகழ்காலத்திய சான்றாக பட்டயங்களில் பயின்று வந்து இன்றும் தொடரும் கரைப் பெயர்கள் என்று அவற்றை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்... ஆனால் கள்ளர்கள் முத்தரையர் என்பதற்குக் கூட சான்றுகள் வேண்டாம், முத்தரையர் பட்டம் அவர்களுக்கு இருக்கிறது என்பதற்கு குறைந்தபட்சம் ஒரு பட்டயமாவது இருக்கிறதா என்றால் ஒன்றும் கிடையாது! முத்தரையர்களின் ஆட்சி முற்றுப் பெற்று ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் திடீரென்று  21 ம் நூற்றாண்டில் வந்து நாங்கள்தான் முத்தரையர் என்பது நகைப்பிற்குரிய வரலாற்று முரணே தவிர வேறில்லை.

வலையர், முத்துராசா, அம்பலகாரர், காவல்காரர், அரையர் , சேர்வை என்று பலவாக உட்பிரிவுகளாக பிரிவுற்றிருந்தாலும் இவர்களின் ஒவ்வொரு கரைப் பெயரும் கூட பட்டயங்களில் முத்தரையர் என்றே பயின்று வந்துள்ளது, இன்றைக்கு நேற்றல்ல ஆயிரம் ஆண்டு காலத்திய வரலாற்றுத் தொடர்பின் வழிவந்தது அவை!
வலையர் என்கிற தொன்மத்தின் வழியினராகிய முத்தரையர் மக்கள் வெறும் பட்டமாக அதை சூடவில்லை, அது சாதியாகவே அவர்களோடு  பன்னெடுங்காலமாக ஒன்றி வந்துள்ளது!  தமிழகத்தில் வேறு எந்தவொரு சமூகமும் ' முத்தரையர் சாதி என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படவில்லை.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான ' தமிழ் கல்வெட்டியல் வரலாறு' எனும் புத்தகதில் இடம்பெற்றுள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம் அழுந்தூர் கல்வெட்டு " காடையான் வலையன் குறிச் சேந்தனான பெரியநாட்டு முத்தரையன்" என்பவனைக் குறிக்கிறது. இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் காடையான் கூட்டத்தினர் இன்றளவும் திருமயம் பகுதியில் காடன், காடையன் என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர்.


அதேபோல புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள் எண் 926, 906 ஆகியன கோனாட்டு முத்தரையன், செவந்தி முத்தரையன் போன்றவர்களை வலையர்கள் ஒன்று கூடி 'சாதி நீக்கம் ' செய்துள்ளதைக் குறிப்பிடுகிறது! ஒரே சாதிக்குள்தான் சாதி நீக்கம் நடைபெற முடியும் . மற்றும் புல்வயல் கல்வெட்டு ( எண் 847 ) அவ்வூரைச் சேர்ந்த கடம்பராய முத்தரையன், எழுந்தாரமைந்த முத்தரையன், தேவேந்திர முத்தரையன்  உள்ளிட்ட மூன்று வலையர் என்றும் குறிப்பிடுகிறது.



மேலும் கி.பி 1127 ம் ஆண்டுகாலத்திய விக்கிரமச் சோழனின் கல்வெட்டு ' வலையன் கடியாறனுக்காக வாணராய முத்தரையன் ' நந்தா விளக்கு ஒன்றை கோயிலுக்கு வைத்துள்ள தகவலை தொல்லியல் ஆவணத்தின் ( 12/ 2001) ஒழிந்தியாம்பட்டு ஊர் கல்வெட்டு நமக்கு அறியத் தருகிறது, மறைந்த தந்தைக்கு தனயன்  விளக்கு வைப்பதும், அண்ணனுக்கு தம்பி விளக்கு வைப்பதும் பழங்காலத் தமிழர் வழக்காகும்.


இதுபோல வாணதிராயர் போன்ற குறுநிலத் தலைவர்களால் வழங்கப்பெற்ற நூற்றுக்கணக்கான பட்டயங்கள் வலையர் என்போரே முத்தரையர் என்று சான்றுடன் நிறுவுகிறது! கட்டுரையின் விரிவு அஞ்சி அவற்றை தனிப்பதிவாக பதிகிறேன்...