Wednesday, 14 December 2016

பாரியின் மண்ணுக்கு ஓர் பயனம்...

பிரான்மலை எனும் பறம்புமலை.., 

மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் கிடக்கிற பல வரலாறுகளின் மௌனசாட்சியமாக நூற்றாண்டு கடந்தும் கம்பீரம் குறையாமல் நிமிர்ந்து நிற்கிறது பாரி மன்னன் கட்டி ஆண்ட பறம்புமலை.. இரண்டாயிரம் அடிக்கும் மேற்பட்ட மலையின் மீதேறி நின்றுகொண்டு உச்சிப் பாறையின் மேற்குச் சரிவில் ஊன்றி நிற்கிற வெட்டருவாளையும் வேல் கம்பியையும் நேர்நின்று வணங்கிவிட்டு நாலாபுறமும் பார்வையை வீசினால் பார்வைக்குத் தட்டுப்படும் அத்தனை கிராமங்களிலும் பாரி காலம் தொடங்கி அம்மண்ணின் பூர்வகுடிகளாக இருக்கின்ற ' செட்டிநாட்டு வலையர்'களின் சிற்றூர்கள் சின்னச் சின்னதாய் சிதறிக் கிடக்கிறது... ஒரு காலத்தில் கோட்டையின் காவலர்களாக பணிசெய்த வலையர்களின் குல தெய்வமே பைரவராக இன்றும் அடிவாரத்தில் கோயிலுக்கு காவலிருக்கின்றார்!



அண்ணன் இரா. சுந்தரவந்தியத்தேவன் அவர்கள் தமது  "பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்" நூலில் (பக்கம் 114, 115) கூறியுள்ளபடி பாரியின் வம்சத்தவர்களாகக் கருதப்படுகின்ற 'ஆரூர்வட்டகை ஏழூர் பத்து' நாட்டின் வலையர்குலத்தின் "உறங்கான் வள்ளிப்பச்சை" வகையறாக்களின் கொடுங்குன்ற நாதரான மங்கைபாகர் கோயிலின் வழிபாட்டு உரிமைகளும், அவர்கள் நடத்துகின்ற பாரிவேட்டச் சடங்குகளும் பாரிமன்னனின் தொன்மத்தையும், வேட்டைக் குடியான வலையர்களுடனான பாரியின் உறவையும்  நமக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது...

 மேலும் சுந்தரவந்தியத்தேவன் அவர்கள் தமது ஆய்வின் வாயிலாக  பிரான்மலையில்  வாழும் வலையர்களில் செட்டிநாட்டு வலையர்கள் மட்டுமல்லாமல் சருகு வலையர், கள்ள வலையர், ராச வலையர், தாலிக்கட்டி வலையர் போன்ற பூர்வகுடி முத்தரையர்  பிரிவினரோடு தானம நாட்டிலிருந்து இடம் பெயர்ந்து வந்த "தானமநாட்டு வலையர்களும்" பிரான்மலையில் வசித்து வருவதை அறிந்து கொள்ள முடிகிறது.

வியர்க்க விறுவிறுக்க  மூச்சைப் பிடித்து மலையில் ஏறி சுணையின் தீர்த்தத்தில் முகத்தைக் கழுவிக் கொண்டு அந்த சில்லிட்ட காற்றில் பாறையில் படுத்துக் கொண்டு இவை அத்தனையையும் அசைபோடுவதில் ஒருவகை மகிழ்வு இருக்கத்தான் செய்கிறது..!

Friday, 9 December 2016

தானாண்மை நாட்டு சேர்வைக்காரர்கள்

                         

                           தா னம நாட்டின் வரலாற்றில் சேந்தன்குடி கிராமத்திற்கு முக்கியப் பங்குண்டு, குறுந்தம்பாறையிலிருந்து
(கி.பி 15ம் நூற்றாண்டுகளில்) வானதிராயர்களால் அழைத்துவரப்பட்டு குடியமர்வு செய்யப்பட்ட போர்க்குடியினரான கொத்தமங்கலம் கிராமத்தின் 'எட்டுக் கரை முத்தரையர்'களோடு சம காலத்தில் தானம நாட்டில் குடியேற்றமடைந்தவர்கள்தான் சேந்தன்குடி கிராமத்தின் வழுவாட்டித் தேவர் உள்ளிட்ட மேல்பகுதி கிராம மக்கள்! இந்த வரலாற்று உண்மைகளை பட்டயங்களும், கல்வெட்டுகளும், ஆங்கிலேயர் குறிப்புகளும் நேரடியாகவே எடுத்துக் கூறுகின்றன. அதைப் பற்றி விரிவான அளவில் ஏற்கனவே பல தருணங்களில் இணையத்தில் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் சேந்தன்குடி கிராம மக்களிடமும் நகல் எடுத்து வீட்டிற்கு வீடு கொடுத்தாயிற்று.

      தற்காலத்திய கீரமங்கலத்தின் மேற்குப் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு  பத்தாம் நூற்றாண்டு தொடங்கி 'தானவதரையர்'  எனும் மரபினர் சோழர் மற்றும் பாண்டிய மன்னர்களுக்கு உட்பட்ட குற்றரசுகளை  இப்பகுதிகளில் நடத்தி வந்தனர். அதன் பிறகுதான் தற்பொழுதைய புதுக்கோட்டை மாவட்டத்தின் வடகாடு கிராமம் முதல் தஞ்சை மாவட்டத்தின் திருச்சிற்றம்பலம் , மாவடுகுறிச்சிப் பகுதி வரை இருந்த கிராமங்கள் அனைத்தும் "தானம நாடு " என்று வழங்கப்பெற்றது. தானவதரையர் எனும் மரபினரின் வழிவந்தோர் இன்றளவும் 'தானண்' எனும் பட்டம் தாங்கி கொத்தமங்கலம், குளமங்கலம், கீரமங்கலம், மேற்பனைக்காடு ஆகிய கிராமங்களில் வசித்து வருகின்றனர். 'தானவ அரையர்' களின் அரண்மனை இருந்த இடம் இடிபாடுகளைக் கடந்து இன்றும் சில சுவர்களோடு ' அரண்மனைத் தோப்பு' எனும் பெயரில் எஞ்சி நிற்கிறது. முத்தரைய மரபினரான தானவதரையர்கள் பல கோயில்களை எடுப்பித்துள்ள  செய்தி புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளது ( கல்வெட்டு எண் : 804, 942, 921, 971, 1049) . ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் நீடித்த இவர்களின் ஆட்சி வெள்ளாற்றுப் பகுதியில்  'வானதிராயர்களின்' வரவிற்குப் பிற்பாடு முடிவிற்கு வந்தது. இந்நிலையில்தான் சில குடியேற்றங்கள் இப்பகுதியில் நடந்தது. (குடியேற்றத்தின் வாயிலாக வந்து சேர்ந்தவர்கள் இயல்பிலேயே போர்ப்படையினராக இருந்ததால் அவர்கள் தமது போர்க்குணத்தால் சில பூர்வகுடியினரை கருவறுத்து இப்பகுதிகளில் தமது ஆட்சியை நிலைநாட்டியதாகவும்  சொல்லப்படுகிறது).  பின்னாட்களில்
நாயக்கர் ஆட்சியின்போது உருவானதுதான் 'சேந்தன்குடிப் பாளையப்பட்டு'. மொத்தத்தில் தானம நாட்டு உருவாக்கத்திற்கு மிகப் பிந்தைய காலத்தில் உருவானதே சேந்தன்குடி சமீன் மற்றும் தானம நாட்டில் சேந்தன்குடி சமீன் என்பது ஆறு கிராமங்களை உள்ளடக்கிய ஒரு சிறு பகுதிதானே தவிர , சமீன் மட்டுமே தானம நாடு கிடையாது.

 கி.பி 1674ல் வெளியிடப்பட்ட பட்டயம் ஒன்று இந்த சமீனை 'முத்தரைய வளுவாடி சமீன் ' (ஆவணம் 22/ 2011) என்று குறிப்பிட்டுள்ளது. மற்றும் 1909, 1935 ஆண்டுகால ஆங்கிலேயர் அறிக்கைகளும், 1983 காலத்திய அரசுக் குறிப்பேடு ஒன்றிலும் தானம நாட்டு சமீன் வலையர் சமீன் என்றும் இதன் தலைவர்களுக்கு 'வழுவாடி' எனும் பட்டம்  இருந்ததையும் தெளிவுபடுத்துகிறது. ஆனால் இவர்களை மறவர் என்றோ, அகமுடையார் என்றோ குறிப்பிடும் சிறு வரலாற்றுக் குறிப்பு கூட கிடையாது. எல்லாவற்றிற்கும் மேலாக இன்றளவும் வழுவாட்டியர்கள் அம்பலகாரர் என்று அறியப்படுகின்ற முத்தரையர்களோடுதான் கொள்வினை கொடுப்பினைகளை மேற்கொண்டு வருகின்றனர். சாதிச் சான்றிதழும் அம்பலகாரர் என்றே வாங்கிக் கொள்கின்றனர்... சேந்தன்குடி கிராமம் அரசியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் தானம நாட்டிற்குள்  தவிர்க்க முடியாத கிராமமாகவும் இருந்து வருகிறது.

 இந்நிலையில்தான் கடந்த மாதத்தில் சேந்தன்குடியைச் சேர்ந்த ஐயா திரு கந்தசாமி ஆசிரியர் அவர்களால் " தமிழக வரலாற்றில் சேந்தன்குடி பாளையக்காரர்கள் வரலாறு" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் வருத்தத்திற்குறிய செய்தி என்னவென்றால் ஆசிரியர் அவர்கள் மேற்கண்ட நூலில் தமது ஆழ்ந்த புலமையையும், வரலாற்று அறிவையும் , தானவ நாட்டின் மண்சார் மக்களின் வாழ்வியல் ஒற்றுமைகளையும் பயன்படுத்தி சேந்தன்குடிப் பாளையக்காரர்களைப் பற்றிய முறையான வரலாற்றை ஆவணப்படுத்தாமல் திட்டமிட்டு திரிபுவாத நோக்கோடு வீரமிகு மரபினரான வழுவாட்டித் தேவர்களின் மேலான வரலாற்றை மடைமாற்றி அவர்களை பல சாதிகளுக்குப் பிறந்தவர்களாகச் சித்தரித்து இறுதியில் ஒட்டுமொத்தமாக தானாண்மைய நாட்டு முத்தரைய மக்கள் அனைவரையுமே முக்குலத்தோர் என்பதாக முடித்துள்ளார்...

மேலும் நூலின் வழியே ஆசிரியர் கொத்தமங்கலம் கிராமத்தில் பிறந்து சட்டமன்றம் சென்ற மதிப்பிற்குரிய பெ. திருமாறன் சேர்வை அவர்களையும், திருச்சிற்றம்பலம் வைரவன் சேர்வை மற்றும் பேராவூரணி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணன் திருஞானசம்பந்தம் மற்றும் மாநில முத்தரையர் சங்கப் பொதுச்செயலாளர் ஐயா குழ. செல்லையா ஆகியோரையும் தேவர் மரபினர் என்பதாக தன் கற்பனையின் வாயிலாக கதையளந்துள்ளார். ( இதே நடைமுறையை முன்னாள் அமைச்சர் அ. வெங்கடாசலம் சேர்வையாரிடம் கையாண்டால் "விளைவு..." என்னவாக இருக்கும் என்பதை  உணர்ந்ததாலோ என்னவோ மாவீரனாரின் வரலாற்றைக் கூறுமிடத்தில்   மட்டும் 'சேர்வைப் பட்டம் கொண்டவர் '  என்பதோடு கடந்து போயுள்ளார்   ) இந்த கற்பனைக் கூற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் 'சேர்வை'ப் பட்டத்தை குறிப்பிட்ட ஒரு சாதிசார்ந்த பட்டமாக அவர் பயன்படுத்தியுள்ளது வேடிக்கையாகும் .தமிழ் சாதிகளில்  ஏறக்குறைய ஏழு பிரிவினருக்கு சேர்வைப் பட்டம் வழக்கிலுள்ளது என்பது பாமர மக்கள் கூட அறிந்த ஒன்றுதான். எனவே ஆசிரியர் அவர்கள் இப்படியான இடைச்செருகளைக் கையாள ஏதேனும் சிலரின் அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக இருக்கலாம் என்பதை அவதானிக்க முடிகிறது... காலம்காலமாக சாதிச் சான்றிதழில் " முத்தரையர் " என்று குறிப்பிட்டுக் கொண்டு சலுகைகளை வாங்கிக் கொண்டு அரசுப் பணியைப் பெற்று வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டு இப்போது நாங்கள் 'அவர்கள் ' ... நாங்கள் ' இவர்கள் ' என்று வியாக்கியானம் செய்வது எத்தனை பெரிய இழிந்த மோசடிக் குணம்...? கேடுகெட்ட செயல்...?  இதே வழுவாட்டியார்களைப் பற்றி 1985 ல் எழுதப்பட்ட ஒரு புத்தகம்  ( இராமசுப்புராம செல்லமுத்துத்துரை) தங்களை பழுவேட்டரையர்களின் வம்சாவளி என்றது, தற்போது தென்மலை, அழகாபுரி பகுதியிலிருந்து வந்தவர்களாக குறிப்பிட்டுக் கொண்டுள்ளனர், இதிலிருந்தே இவர்கள் எத்தனை பெரிய குழப்பவாதிகள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது..




தொடக்க காலத்தில் தங்கள் குடும்பத்தினரை மட்டும் மாற்று சமூகமாகச் சொன்னவர்கள் அதன் பிறகு வழுவாட்டியர்கள் அனைவரையும் தேவர்களாக்கி சித்துக்காடு, செருவாவிடுதி பகுதகளில் உள்ள அம்மரபினரை ஏமாற்றி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் படம் போட்ட பலகைகளை திறக்கச் செய்தனர், தற்போது இரு தினங்களுக்கு முன்பு சேந்தன்குடி கிராமத்திலும் சில முத்தரையர் சமூக இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஒரு பலகையைத் திறந்துள்ளனர். உள்ளபடி பார்த்தால் தானமநாட்டில் 'பதினொன்று நாட்டு அகமுடையார்' எனும் மரபினர் தொன்றுதொட்டு வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் முத்தரையர்களான வழுவாட்டிகளுக்கும் , அம்பலகாரர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அப்படியிருக்கும்போது உண்மையை அறிந்தோ அறியாமலோ( !? )திரு சேதுராமன் அவர்களின் 'மூவேந்தர் முன்னணிக் கழகம்' இவர்களைக் கொண்டு கிளை அமைப்பதை முத்தரையர்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்... இரு சமூகங்களுக்கும் இடையேயான இணக்கமான போக்கினை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

 அதுமட்டுமல்லாமல் புத்தகம் வெளியிடப்பட்ட போதே, அதில் முத்தரையர்களை வீம்புக்கு இழுக்கும் வகையில் நூலாசிரியர் சில பதங்களைக் கையாண்டிருப்பதை நாகரிகமான முறையில் பக்க எண்களோடு சுட்டிக் காட்டி அதை அப்புறப்படுத்த வேண்டுமென சொல்லியும் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். மீண்டும் அதை நினைவுபடுத்தி...  கட்டுக்கதைகளை வரலாறுகளாக எழுதி தேவையற்ற சச்சரவுகளை உருவாக்க வேண்டாம் என்பதையும் தானம நாட்டு முத்தரையர்களின் வராலாறு தெளிவாக உள்ளது, அதில் குறிப்பிட்ட சிலரின் அரசியல் சுயலாபத் தினவினைத் தீர்க்க எல்லோரின் பிறப்பினையும் 'பலகை திறக்கிறேன் பேர்வழி ...' என்று மடைமாற்றாமல் இருப்பது அனைவருக்குமே நலம் என்பதையும் முத்தரையர்களின் சார்பாக  ஆணித்தனமாக சொல்லிக் கொள்கிறோம்....

https://www.facebook.com/durai.rajakumaran/posts/1064359563674361

துரை. இராஜகுமரன்
வடகாடு.

Saturday, 3 December 2016

தானாண்மை நாட்டு சேர்வைக்காரர்

தானமநாட்டு அம்பலகாரர்

தானம நாட்டு அம்பலகாரர்....! (வரலாற்றின் வழியே சிறு தேடல்)


தானம நாடு...

              இன்றைய புதுகை,தஞ்சை மாவட்டங்களின் எல்லைப் புறத்தில் அமைந்துள்ள சமதளப் பரப்பு.முன்னொரு காலத்திலும் அப்படித்தான் இருந்தது சோழ,பாண்டிய நாடுகளின் எல்லைக் கோடாகவும், அவ்விரு நாடுகளுக்குமிடையே கடும் போர் நடைபெறுகின்ற காலகட்டத்தில் இரு நாட்டுப் படை வீரர்களும் மோதிக் கொள்ளும் களமாகவும். அப்படி ஆயிரம் ஆயிரம் போர் மறவர்கள் சிந்திய இரத்ததால்தானோ என்னவோ...இன்றளவும் இப்பரப்பின் மணல்கள் இரத்தச் சிவப்போடு செம்மண்ணாகவே காட்சியளிக்கின்றது!

விசயாலயச் சோழரும் அவருக்குப் பின்னர் அரியனை ஏறியோருமான "பிற்காலச் சோழர்கள்" சோழ நாட்டை பன்னிரு நாடுகளாக பிரித்தாண்டனர்.அப்படிப் பிரிக்கப்பட்ட பன்னிரு நாடுகளின் ஒன்றான இராஜராஜ சோழ வளநாட்டின் ஒரு பகுதியே இன்றையத் தானமநாடு.வெள்ளாற்றின் வடக்குப் புறத்தில் அமைந்துள்ள இப்பரப்புகள் தானவ(ம) நாடு என்று பெயர் பெற்றது முதலாம் இராசேந்திரச் சோழனின் காலத்தில்தான். ஆனாலும் அதற்கு முன்னரே இப்பரப்புகள் இப்பகுதியில் வாழ்ந்த 'அரையர்' என்போரால் ஆளப்பட்டதற்கான சான்றுகள் கல்வெட்டுக்களாகவும்,செப்புப் பட்டயங்களகவும் ஏராளம் உண்டு.ஆனாலும் 'தானவர் எனும் பட்டம் பெற்ற அரையர்' இப்பரப்புகளை ஆளத்தொடங்கியதன் பிறகே (இராசேந்திரச் சோழரின் காலம் தொட்டு) இவை தானவ நாடு என்று பெயர் பெற்றது.அதற்கு முன்னர் அம்பில் நாட்டோடு இணைந்து புன்றில் கூற்றத்திலேயே அடங்கியிருந்தது.


உள்ளடங்கும் ஊர்கள்;
                
              வடகாடு,மாங்காடு,கொத்தமங்கலம்,கீரமங்கலம்,அணவயல்,கீழாத்தூர்,மேலாத்தூர், 
புள்ளான்விடுதி,நெடுவாசல்,ஆவணம்,சேந்தன்குடி,நகரம்,வேம்பங்குடி,சித்தாதிக்காடு,சானாகரை,பைங்கால்,செரியளூர்,பனங்குளம்,மறமடக்கி,குளமங்கலம்,பாண்டிக்குடி,மேற்பணைக்காடு,கொடிக்கரம்பை,பட்டத்தூரணி,நெய்வத்தளி,கண்டியூர்(கல்வெட்டுக்களில் சோழசிகாமணிபுரம் என்று குறிக்கப்பட்டுள்ளது,தற்பொழுது இவ்வூரின் நினைவாய்ச் சிறு சிவன் கோயில் மட்டுமே உள்ளது),செங்கமங்கலம்,அம்மையாண்டி,வீரராகவபுரம்,பஞ்சநதிபுரம்,ஏனதிகரம்பை,கரம்பக்காடு,செருவாவிதி,சித்துக்காடு,
திருச்சி்ற்பல்,,பொக்கன்விடுதி,களத்தூர்,கருக்காகுறிச்சி,பேராவூரணி,கடாரம் கொண்ட சோழபுரம் (தானம நாட்டின் தலைநகரம் இதுதான்,ஆனால் இப்பொழுது காணாமல் போய்விட்டது!)

அம்புலி ஆறு,வில்லுனி ஆறு,அக்கினி ஆறு போன்றவை இப்பகுதியில் உள்ள காட்டாறுகள் ஆகும்.இவற்றுள் அம்புலியாற்றை மையமாகக் கொண்டு வட தானமநாடு,தென் தானமநாடு என இப்பகுதிகள் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.குறிப்பாக வடகாடு மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பரப்புகள் வட தானமநாடு எனவும்,கொத்தமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பரப்புகள் தென் தானமநாடு எனவும் குறிக்கப் பெறுகின்றன.வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திலேயே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு அதாரமாக வட தானம நாட்டைச் சார்ந்த "வடகாடு" திகழ்கின்றது. வடகாட்டில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி அதை உறுதிபடுத்துகிறது.1981 ம் ஆண்டு தொல்பொருள் ஆய்வுத் துறையினர் ஆய்வினை மேற்கொண்டு இவ்வுண்மையை வெளிக்கொணர்ந்தனர்.
மேலும் தானம நாட்டின் தாய் கிராமமாக கொத்தமங்கலம் கிராமமே கருதப்படுகின்றது.இவ்வூரிலிருந்து பெறப்பட்ட 'கொத்தமங்கலம் செப்பேட்'டின் மூலமாகவே 'பதினோராம் நூற்றண்டு முதல் தானவ நாடு என்று அறியப்பட்ட இந்தப் பகுதி பதினைந்தாம் நூற்றாண்டின் பின்னர் தானம நாடு-தானம வளநாடு (இன்றையச் சூழலில் தானாண்மைய நாடு) என்று பெயர் பெற்றதாக அறிந்துகொள்ள முடிகிறது'.

"விருதராச பயங்கர வளனாடாகிய,கானாடான,சிங்ககுலகாரானூர் நாடான ராசலெச்சனிக வளநாடான தானம வளநாடு" என்று தொடங்கும் இந்தச் செப்பேட்டை 15,16 ம் நூற்றாண்டுவாக்கில் இப்பகுதியை ஆண்டோரான "வாணதிராயர்கள்" என்போர் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த எட்டு கரைகாரர்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைந்துள்ளது,அவர்கள் யாரெனில்

*மணவாளன் முத்திரியன்,
*கருவாண்டான் முத்திரியன்,
*நன்ன பெரியான் முத்திரியன்,
*வெள்ளியன் முத்திரியன்,
*சுண்டாங்கி முத்திரியன்,
*குளூனரி முத்திரியன்,
*கொங்குராயன் முத்திரியன்,
*சங்கர விசாலையன் முத்திரியன்...போன்றொராவர்.
ஆட்சி செலுத்திய மன்னவர்கள்;
குலோத்துங்கச் சோழ தானவதரையன் (எ) மதுராந்தகன் வாழவந்தப் பெருமான் (சோழருக்கு கட்டுப்பட்டு-முதலாம் இராசேந்திரச் சோழர் காலம் துவங்கி),
சுந்தர பாண்டியன் (எ) வாழவந்தப் பெருமான் (பண்டியர்களுக்கு கட்டுப்பட்டு-மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் காலம் துவங்கி),
வாழவந்தப் பெருமாள் (எ)காளிங்கராயா( வீரசேகர் எனும் பாண்டிய மன்னருக்கு(???) கட்டுப்பட்டு).
மேலும் பல மன்னர்களின் பெயர்கள் தெரியவில்லை,ஆனாலும் பதினெட்டாம் நூற்றாண்டுவரை தானவதரையர்,மதுராந்தகன்,வழவந்த பெருமாள் உள்ளிட்ட பட்டங்களைப் பெற்று இவர்களின் ஆட்சி தொடர்ந்தது. இவர்கள் சோழர்,பாண்டியர் போன்றோரின் மேலான்மையை ஏற்றிருந்தாலும் 'தமது பகுதியில் தான் வைத்ததே சட்டம்' என்கிற ரீதியில்தான் ஆண்டனர்.


விசயநகர மன்னர்கள் காலத்தில் சிதறுண்டுபோன தானமநாடு;

                      தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட விஜய நகர மன்னர்கள் கோதாவரிக் கரையிலிருந்து புறப்பட்டு வந்து,தமிழகத்தை வென்று,தமிழ் மன்னர்களைத் தமக்கு அடிமை ஆக்கினர்.அதுமுதல் தமிழ் மொழி சிதைவடைந்து,தமிழர்களின் பழம்பெரும் பண்பாட்டு நெறிமுறைகள் ஓரம் கட்டப்பட்டு,முன்னைத் தமிழ் மன்னர்கள் அக்கியிருந்த கட்டமைப்புகளும் சிதறுண்டுபோனது...தமிழ்நாடே ஆட்டம் கண்டதன் பிறகு தானம நாடு மட்டும் தப்புமா என்ன?!. வட தானம நாடு புதுகை தொண்டைமான்(கள்ளர்) மன்னர்களுக்கும்,தென் தானமநாடு சேதுபதி மன்னர்களால் தஞ்சை மராட்டியரிடத்திலும் ஒப்படைக்கப்பட்டது.இதில் குறிப்பிடத்தக்க விடயம் தென் தானமநாட்டின் "சேந்தன்குடி" தலைமையில் நாயக்கர்களால் புதியதொரு பாளையம் அமைக்கப்பட்டது. அதில் கொத்தமங்கலம்,குலமங்கலம்,பனங்குளம்,கீரமங்கலம்,நகரம் உள்ளிட்ட கிராமங்கள் இணைக்கப்பட்டன.இந்த ஆறு கிராமங்களை உள்ளடக்கிய பாளையத்தின் தலைவராக-பாளையக்காரராக- நியமிக்கப்பட்டோர் "வழுவாட்டித் தேவர்" என்ற பட்டமுடையோர்...


நம்முன் நிற்கும் கேள்விகள்...!!!
தானமர் என்னும் அரையர் எந்த இனக்குழுவைச் சார்ந்தோர்?
அவருக்கு முன்னமே வெள்ளாற்றுப் படுக்கையை ஆண்ட அரையர்கள் யாராக இருக்க முடியும்?
வாணவரையர்கள் முத்தரையர்களா?
வழுவாட்டித் தேவர் என்போர் யார்?அவர்கள் தேவர் பட்டம் பூண்டதின் காரணம் என்ன?
தாங்கள் தனித்துவம் கொண்டோர் என்று இன்றைக்கும் சொல்லிக் கொள்ளுகின்ற தானம நாட்டு அம்பலகாரர்களின் தனித்துவக் குணங்கள் யாது?
அம்பு நாட்டு வலையர்களுக்கும் தானம நாட்டு அம்பலகாரர்களுக்கும் என்ன ஒற்றுமை?


வேட்டைகுடிகள்

தொடக்க காலத்தில் வேட்டைக் குடிகள் உபயோகித்த வளைதடி , நீண்ட காலப் பயிற்சிக்குப் பின்னரே போர் ஆயுதமாக பரிணாமம் பெற்றது. குறிப்பாக தென்மாவட்ட வலையரின மக்கள் இன்றும் வளரியைத் தமது வேட்டுவப் பாரம்பரியத்தின் தொன்மமாகக் கருதி போற்றி வருகின்றனர். அவர்களின் வழிபாட்டுச் சடங்குகளிலும், பாரிவேட்டம் போன்ற மரபு வழிப்பட்ட வாழ்வியல் நிகழ்வுகளிலும் வளரியின் பங்கு முதன்மையானது... வளரி இடம்பெறாமல் இந்தச் சடங்குகள் நடைபெறாது.

திருவிழாக் காலங்களில் சாமி ஊர்வலத்தின்போது வலையர்களில் மூப்பர்கள் இந்த வளரியையும் சேர்த்து எடுத்துச் செல்லும் நடைமுறை இன்றும் வழக்கில் உள்ளது... மேலும் கடந்த நூற்றாண்டுகளில் திருமண நாள்குறிப்பின்போது (நிச்சயதார்த்தங்களில் ) மணமகன் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டால் , மணமகனின் சார்பாக அவரது சகோதரி வளரியை மணமகள் வீட்டுக்கு எடுத்துச் சென்று அதைக் கொண்டு சடங்குகளைச் செய்ததாக சொல்லப்படுகிறது... எப்படியாகினும் வளரிக்கும் வலையருக்குமான உறவுகள் பாரம்பரியமாக இன்றளவும் தொடர்ந்தே வருகிறது. குறிப்பாக மேலூர் பகுதி வலையர்களின் இல்லங்களில் வளரியை அதிகம் காணலாம்.

படம்: கோவை செம்மொழி மாநாட்டு மலரின் கட்டுரை...